இந்த நாள் இனிய நாள்!

இரவு மணி 2 இருக்கும். சமயலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. எழுந்து போலாம் என்றாலும் இரவு டிவி பார்த்துவிட்டு சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று பாத்திரம் உருட்டும் கணவன் தான் அங்கு இருப்பார் என்று நன்றாகவே தெரியும். திரும்பி படுத்துக்கொண்டாள் லலிதா. நாளை திருமண நாள். 10 வருடமாக ஒண்ணும் பிரமாதமாக கொண்டாடவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு வருடம் வரும் அதே ஏக்கம். புதிதாக புடவை, பான்ட் சட்டை கூட வாங்குவது இல்லை. இருக்கும் நல்ல பட்டு சேலை கட்டிக்கொண்டு கோவில் கூட்டிபோவதே பெரிய விஷயம் இவள் கணவனுடன். கண்களை இறுக மூடி படுக்க முற்பட்டாள். காலையில் பார்த்த இந்த நாள் இனிய நாள் நினைவிற்கு வந்தது. கண்டதை போட்டு குழப்பி கொள்ளாமல் படுக்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்து கொண்டாள்.


காலை எழுந்த போது அந்த ரூமில் ஏதோ வாசனை வந்து கொண்டிருந்தது. என்னடா என்று எழுந்து பார்த்தால், கட்டில் முழுதும் மல்லிகை பூக்கள். இதென்ன புது வேடிக்கை என்று திரும்பி பார்த்தால் கணவனை காணவில்லை. எழுந்து வேகமாக சமையலறை நோக்கி போனாள். அட, இதென்ன ஆச்சிரயம். அங்கே காபி தயாராக இருந்தது. பக்கத்திலேயே ஒரு அழகான ரோஸ். "இவருக்கு என்ன ஆகி விட்டது? ஆளை காணோமே காலையிலிருந்து". காபி கோப்பையை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தாள். கண்களை நம்ப முடியவில்லை. டேபிளில் டிபன் தயாராக இருந்தது. இவளுக்கு பிடித்த ரவா இட்லி. அதில் அங்கே அங்கே எட்டி பார்க்கும் முந்திரிகள். நெய் வாசம் தூக்கியது. இதில் ஏதோ பெரிய குளறுபடி இருக்கிறது என்று தோன்றவே, படுக்கை அறை சென்று பார்த்தால் கட்டிலின் மேல் விரித்திருந்த அழகிய பட்டு புடவை இவளை தாறுமாறான சந்தோஷத்தில் தள்ளி விட்டது. மேல் வீடு பவித்ரா அம்மா வாங்கியதை விட ஜரிகை பெரிதாக. "இவருக்கு என்ன இப்படி திடீர் ஆசை வந்துவிட்டது என் மேல்" என்று வியந்து போனாள். "இத்தனை வருடம் இல்லாமல் இந்த வருடம் மாறிவிட்டாரா. போன வாரம் மச்சினன் வந்து போன போது இவருக்கு அளித்த போதனைகள் மண்டைக்குள் ஏறிவிட்டதா?" வியப்பும் பூரிப்பும் சேர்ந்து திக்குமுக்காட செய்தது.

திடீரென சமயலறையில் சத்தம் கேட்டது. "இங்கே தான் ஒளிந்து கொண்டு ஏமாற்றுகிறாரோ? இத்தனையும் செய்து விட்டு நல்ல பிள்ளை போல் நடித்துகொண்டு இருக்கிறாரே.. " விடு விடுவென சமையலறை நோக்கி நடந்தாள்.
அங்கே அவள் அன்பு கணவன் அதே ஓட்டை போட்ட பனியனில் சக்கரை டப்பாவை திறந்து வாயில் சக்கரை அள்ளி போட்டு கொண்டிருந்தார். லலிதாவை பார்த்தவுடன் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார்.
"என்னங்க பண்றீங்க?"
"டிவி பாத்திட்டு இருந்தேனா.. வாய் நம நமன்னு இருந்திச்சு. அதான்..."
ஒரு நிமிடம் அதிர்ந்து பின் திரும்பி பார்த்தாள். ஹாலும், படுக்கை அறையும் இருட்டை கவ்வி கொண்டிருந்தது. ரவா இட்லி வாசம் முற்றிலும் போய் இரவு செய்து வைத்திருந்த புளித்த தோசை வாசம் வர தொடங்கியது.


நாளை திருமண நாள். கொஞ்சம் நல்லா இருக்கும் பட்டு புடவையை பீரோவிலிருந்து எடுத்து வைக்க வேண்டும். பவித்ரா அம்மா வாங்கியது போல் பெரிய ஜரிதான் இருக்காது...

Comments

  1. Hahaha.. Nice.. உங்க மேல் வீடு அம்மா பேரு பவித்ராவா? :D

    ReplyDelete
  2. Hi Stranger! Good one again!

    The best things for "her" to do here is to surprise "him" with lots of love.

    Surely he will appreciate it and will turn out better for the next anniversary at least...

    Wishing the "him" and "her" the best as they look forward to many more decades of marital bliss!

    ~ NRIGirl

    ReplyDelete

Post a Comment

What do you think? Please share your views...